இந்திய மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் - கச்சதீவுக்கு அண்மையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இன்று (28) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று (27) தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை
இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர் இரண்டு மீனவர்களை மீட்டுள்ளதோடு, அத்துடன் காணாமல் போன மற்ற இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் நேற்றையதினம் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய மீனவர்கள் இன்றையதினம் குமுதினி படகு மூலம் குறிகட்டுவானுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் நாளையதினம் பலாலி விமான நிலையமூடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன்னெடுத்து வருகிறது.