பொலிஸ் வேலைக்கு புதிய ஆட்சேர்ப்பு; குவிந்துள்ள விண்ணப்பங்கள்!
இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பான முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள் கடந்த 07-ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன.
இந்த நேர்முகத் தேர்வுகள் அடுத்த மாதம் 18-ஆம் திகதி வரை, பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தின் டொபிகின் விளையாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 7,500 புதிய அதிகாரிகளை இந்தப் பதவிகளுக்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 08-ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் (Online) ஊடாக சமர்ப்பிக்க முடியும்.
அதேவேளை கடந்த 07-ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ளும் ஆர்வத்துடன் நாட்டின் பல்வேறு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் விண்ணப்பங்கள் பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.