நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு
மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது என வெளியிட்ட கூற்றுத் தொடர்பாக, இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடத்தில் நாடாளுமன்றத்தினால் சட்டங்கள் இயற்றப்பட்டு எல்லை நிர்ணயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கான சட்டமொன்று இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கமைய விரைவாகச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த ஆண்டில் நாடாளுமன்றம் சட்டமியற்றி, எல்லை நிர்ணயப் பணிகளைச் செய்து தந்தால், ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்ற எண்ணம் இல்லை. நாடாளுமன்றில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் அந்த நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது. சட்டத்தை நாம் விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.