வீட்டு வேலைக்கு அழைத்துவரப்பட்ட சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை
சம்பவத்தில் மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த 15 ஆம் திகதி குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்ட போது இரவு தன்னை சந்தேக நபர் அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.