இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார்
இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார்.
இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.

அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.
ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.
1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.
1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.
மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.