மொரட்டுமுல்ல பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீ விபத்து
கொழும்பு மொரட்டுமுல்ல காவல்துறை எல்லைக்குட்பட்ட ஜனதா ஜய மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (13 ) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தத் தீ விபத்தினால் அங்கிருந்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்கள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டிற்குச் சிறு அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனம் மற்றும் நீர் தாங்கி ஊர்தி என்பன தீயணைப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டன.
தீயணைப்புப் பிரிவு அதிகாரிகளின் கடும் முயற்சியினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனவும், தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்புப் பிரிவினரும் காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.