மட்டக்களப்பில் பாலத்தில் மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் உள்ள பாலமொன்றில் மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
களுவாஞ்சிக்குடி, ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனைச் செலுத்தியவரே மோட்டார் சைக்கிளுடன் பாலத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றையதினம் (25-08-2024) பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பழுகாமம், பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்ட பொலிஸார், உயிரிழந்தவுடன் பயணித்த 2 நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
