நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ; எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் சபையில் பெரும் பதற்றம் நிலவியது.
விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை அமருமாறு சபாநாயகர் பலமுறை அறிவுறுத்தினார்.
எனினும், அவர் தொடர்ந்து உரையாற்றியதால், "நீங்கள் சபையைத் தொடர்ந்து நடத்த விடாவிட்டால், உங்களைச் சபையிலிருந்து வெளியேற்ற வேண்டியிருக்கும்" எனச் சபாநாயகர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

"இந்தச் சபையில் ஒரேயொரு கடற்றொழில் அமைச்சரே (அமைச்சர் சந்திரசேகர) இருக்கிறார், இருவர் இல்லை" எனச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், தேவையற்ற நாடகங்களை நிறுத்திவிட்டு அமருமாறு உறுப்பினருக்கு உத்தரவிட்டார்.
"உங்களுக்குச் சிங்களம் நன்றாகப் புரியும் என நினைக்கிறேன்" (You can understand Sinhala well) எனக் குறிப்பிட்ட சபாநாயகர், நிலையான கட்டளைகளுக்கு மதிப்பளித்துச் சபையை முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அவருக்குத் தெளிவுபடுத்தினார்.
வாக்குவாதத்தின் இறுதியில் தனது உரையை நிறுத்திக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , "சபை முதல்வருக்கு இடையூறு விளைவிக்க நான் விரும்பவில்லை, ஆனால் அமைச்சரின் ஊழல்கள் குறித்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்" என எச்சரிக்கை விடுத்து அமர்ந்தார்.
இந்தச் சம்பவத்தினால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் தடைப்பட்டதோடு, உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றன.