சுடுகாட்டுச் சாம்பல் கேட்டு மிரட்டல் ; செய்வினைப் பூஜைகளால் கிராமத்தை அதிர வைத்த போலிச் சாமியார்
இந்தியாவின் மும்பை திந்தோஷி பகுதியைச் சேர்ந்த 37 வயதான போலிச் சாமியார், தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இவர், சமீபகாலமாகத் தன்னை ஒரு அகோரி சாமியாராகக் காட்டிக்கொண்டு, தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார்.

செய்வினைப் பூஜைகள்
செய்வினைப் பூஜைகள் என்ற பெயரில் மதுபானம், சிகரெட், ஆட்டு ஈரல், எலுமிச்சை மற்றும் சுடுகாட்டுச் சாம்பல் போன்றவற்றை பக்தர்களிடம் கேட்டுப் பெற்றுள்ளார்.
பூஜையின் போது மது அருந்துவது மற்றும் சிகரெட் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அவர், எஞ்சிய பொருட்களைக் கருப்பு மற்றும் சிவப்புத் துணியில் கட்டிச் சந்திப்புகளில் வீசுமாறு பக்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனை எதிர்க்கும் அல்லது கீழ்ப்படிய மறுக்கும் நபர்களைப் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியும் வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில், பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.