இணைய மோசடியில் சிக்கிய திறைசேரி ; பணம் மீட்பு சாத்தியம் குறித்து விளக்கம்
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ‘Phishing’ எனப்படும் இணைய மோசடி முறையின் மூலம் திருடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வகை மோசடியில், இலக்கு வைக்கப்படும் அதிகாரிக்கு தவறான தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு, அவர்களிடமிருந்து இரகசிய தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

பின்னர் அந்த தகவல்களை பயன்படுத்தி, அதிகாரிக்கு தெரியாமலோ அல்லது அவரின் செயல்முறைகள் வழியாகவோ பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கவனத்துடன் செயல்பட்டிருந்தால், இந்த 2.5 மில்லியன் டொலர் பணப்பரிமாற்றத்தைத் தடுக்க முடிந்திருக்குமென விஜேவர்தன குறிப்பிட்டார்.
மேலும், தற்போது இந்தத் தொகை எந்த நாட்டில் உள்ளது என்பது முக்கியமானதாக இருப்பதாகவும், அந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பைப் பொறுத்தே பணத்தை மீட்கும் சாத்தியம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.