ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண் அரங்கேற்றிய சம்பவம்; 21 வருடங்கள் சிறை
இத்தாலிக்கு வீட்டுப் பணியாளராகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டில் 21 வருடங்கள் சிறைத் தண்டனை எதிர் கொண்டுள்ளார்.
ரோம் நகரில் வீடு ஒன்றில் முதியவரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான இலங்கை பெண் (Nawela Kevinda) , தான் பராமரித்த முதியவரைக் மதுபோதையில் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோப்பி கேட்டமைக்காக கொலை
பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டமைக்காக முதியவரை மிகக் கொடூரமாக அடித்து அவர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 94 வயதான Nicolò Caronia எனும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி இத்தாலியப் பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர்.
2022ம் ஆணடு யூன் மாதம் 2ம் திகதி நடந்த இச் சம்பவத்தின் போது நிக்கோலா கரோனியா (Nicolò Caronia) ஒரு கோப்பி தருமாறு தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

இலங்கை பெண் மது போதையில் இருந்தமையினால் கோப்பி வழங்க மறுத்து தகராறு செய்துள்ளார். மனமுடைந்த முதியவர் தானே எழுந்து கோப்பி போட முயன்ற போது ஆத்திரமடைந்த இலங்கைப் பெண் அவரைத் தாக்கியுள்ளார்.
கைகள், முழங்கைகள் மற்றும் கால்களால் முதியவரின் தலை மற்றும் முகம் என உடல் முழுவதும் பலமாகத் தாக்கியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதோடு வீட்டில் இருந்த பொலிஸ் கௌரவச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் மீது துப்பி அவமரியாதை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக்குச் சென்ற மகன் அதிர்ச்சி
பின்னர் முதியவரைப் படுக்கையில் தள்ளி விட்டு , பெண் தனது அறைக்குச் சென்றுள்ளார். நிக்கோலாவின் மகன் பேப்றிசியோ தனது தந்தையைத் தொலைபேசியில் பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் பணியாளர் பதிலளித்த போது பின்னணியில் தனது தந்தை வலியால் முனகுவதைக் கேட்டு சந்தேகமடைந்த மகன் உடனடியாக வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற மகன் தந்தை மிக மோசமான நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக தந்தையை மருத்துமனயில் அனுமதித்த போதும், சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய நிக்கலோ ஓகஸ்ட் 27ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பராமரிப்பாளரான இலங்கை பெண் மீது கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் திட்டமிட்ட கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரோம் நீதிமன்றம் குற்றவாளியான இலங்கைப் பெண்ணான நவேலாகேவிட்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.