காலவகாசம் இன்றுடன் நிறைவு; இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு
அதிகாரிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுக்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அதனைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இணையதளத்தில் சில தடங்கல்கள்
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் இணையவழி (Online) ஊடாகவே தங்களது விபரக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி, இன்றைய தினத்திற்குப் பின்னர் சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்காத அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் பெருமளவிலானோர் இணையவழி ஊடாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையதளத்திற்குள் பிரவேசித்து தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க முயன்றதால், இணையதளத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, இன்றைய தினத்திற்குள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போகும் நபர்களுக்கு ஒரு வார சலுகைக்காலத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜூலை மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.