இரண்டாவது கணவருடன் இணைந்து செய்த தொழில்; பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா சொத்தை முடக்க உத்தரவு!
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்த குற்றச்சாட்டின் கீழ், பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு இந்த சொத்து முடக்க உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சுமார் 300 இலட்சம் (30 மில்லியன்) ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல்
குறித்த பெண், தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் பெருமளவு சொத்துக்களை சேர்த்துள்ளதாக காவல்துறை மா அதிபரினால் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
. இதன் போது பெண்ணின் இரண்டாவது கணவரால், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு தொட்டலங்க பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 1.30 பேர்ச்சர்ஸ் பரப்புடைய காணி மற்றும் 0.75 பேர்ச்சர்ஸ் காணியுடன் கூடிய மூன்று மாடி வீடு என்பன கண்டறியப்பட்டன.
இதனை அடுத்து, பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.