நுவரெலியாவில் காலநிலை மாற்றம்; 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை
நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ள நிலையில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதன்படி நுவரெலியாவில் இன்று (22) 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாலை நேரத்தில் கடுமையான மூடு பனி நிலவி காணப்படுகின்றன.

மாலை நேரத்தில் கடுமையான மூடு பனி
இதில் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி, நுவரெலியா - கண்டி பிரதான வீதி மற்றும் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் முழுமையாக மூடிய மூடுபனியால், வாகன சாரதிகள் தங்கள் வாகனத்தை குறைந்த வேகத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி இயக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதேவேளை கடும் பனி மற்றும் குளிரால் கிராம பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் உறைபனி நிலவும் நேரங்களில் பிரதான வீதியில் வாகனங்களை ஓட்டும்போது அதிகம் வழுக்கும் அபாயம் இருப்பதால், போக்குவரத்து ஒழுங்குமுறைகளைப் பேணுமாறு அந்தந்தப் பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் நுவரெலியாவில் காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.