காட்டு யானையால் காயமடைந்த பேருந்து பயணிகள்
அனுராதபுரத்திலிருந்து கெக்கிராவில நோக்கி தலாவ வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 06 பயணிகள் காயமடைந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (2023.12.24) காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயிலுப்பள்ளம் பகுதியில் திடீரென வீதியைக் கடந்த காட்டு யானையுடன் குறித்த பேருந்து மோதியதாகவும், காட்டு யானையை மோதிய பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்குள்ளாகி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.