இலங்கை கடலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் சடலங்கள் அனுப்பிவைப்பு
இலங்கையின் காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய 'ஐரிஸ் டெனா' (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 உடலங்களும் தற்போது மத்தல வானூர்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல்
உயிரிழந்தவர்களின் உடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய உத்தரவிற்கு அமைவாகவே, குறித்த உடலங்கள் இன்று வானூர்தி மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடற்படை மைல் தொலைவிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' கப்பல் கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் உயிரிழந்த ஏனைய மாலுமிகளின் உடலங்களும் அடுத்தடுத்த கட்டங்களாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.