சேவையிலிருந்து விலகிய கோட்டாவுக்கு சலுகைகள் கிடைக்காது!
சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபயவுக்கு இல்லை என சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி இது தொடர்பில் கோட்டாபயவுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.