$1 பில்லியன் பணத்தை வெளியேற்றிய வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு பிணை
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தனியார் வங்கி அதிகாரிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இதன்படி ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.
மேலும், குறித்த வங்கி அதிகாரிகள் அவர்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடை செய்து மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் ஜிப்ரி என்ற வர்த்தகரின் பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேகநபரான வர்த்தகர் மற்றும் மற்றொரு சந்தேகநபரை வரும் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.