300க்கு தடை; பெரும் சிக்கலில் இலங்கை மக்கள்
300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இன்று (26) தெரிவித்தார்.
அத்துடன் , இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை ரயில்களுக்கான சிக்னல் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதால், ரயில் விபத்துகள் குறித்து தீவிர கவலை ஏற்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்களின் செயற்பாடுகள்
இரும்பு, அலுமினியம், தண்ணீர் குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானத் துறையில் உள்ள பல உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், பெரிய அளவிலான கட்டுமான நிறுவனங்களின் செயற்பாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமல்லாது காகிதம், அட்டை, செய்தித்தாள் மற்றும் புத்தகத் துறைகளில் வேலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் புபுது ஜயகொட தெரிவித்தார்.