குடும்பத் தகராறு ; பிரதேச செயலகத்திற்கு முன் தனக்கு தானே தீ மூட்டிய நபர்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம்
குடும்ப உறவினர்கள் தான் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என சித்தரித்து, தனது பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் இவ்வாறு உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஹட்டன் பொலிஸிலும் முறைப்பாடு செய்ததாகவும், அந்த முறைப்பாட்டிற்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.