நள்ளிரவில் கணவனின் திடீர் வருகை ; பலாக்காய் விழுந்ததால் வெட்டவெளிச்சமான கள்ளக்காதல்
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனைவியின் நடத்தை தொடர்பில் பல்வேறு வதந்திகள் கேள்விப்பட்டிருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மனைவி மீது சந்தேகம் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் தலைவருடன் ஊவா மாகாணத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அவர், எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
கையடக்கத் தொலைபேசியின் மின்கலன் தீர்ந்திருந்ததால், தான் வீட்டிற்கு வருவது தொடர்பில் மனைவிக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவரால் முடியவில்லை.
இரவு சுமார் 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவர், கதவைத் தட்டியபோது மனைவி கதவைத் திறப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டதுடன், வீட்டின் பின்பக்கக் கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்து சத்தம் கேட்டுள்ளது. மின்கல விளக்கை எடுத்துக்கொண்டு தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த நேரத்தில் மரத்திலிருந்து சில பலாக்காய்கள் கீழே விழுந்த சத்தமும் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அருகில் வசித்த மனைவியின் சகோதரர்களை அழைத்த அவர், மரத்தில் திருடன் ஒருவர் பதுங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துள்ளார்.

அங்கு வந்த உறவினர்கள் மரத்தில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது. மேலும், குறித்த நபர் வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் எனவும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கணவன் தனது மனைவியை அந்த நபருடன் அனுப்பி வைக்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மனைவியின் சகோதரர்களும் குறித்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இரு பிள்ளைகளையும் தாங்கள் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், குறித்த நபர் கொழும்பில் தொடர்ந்தும் பணியாற்றுவதைத் தவிர்த்து, தனது இரு பிள்ளைகளையும் தானே பாதுகாத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.