இளைஞனின் உயிரைப் பறித்த கொத்து ரொட்டி; துயரத்தில் குடும்பம்
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் நேற்று முன்தினம் இரவு (24) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (25) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சகோதனுடன் கொத்து சாப்பிட்ட இளைஞன்
சம்பவத்தில் கல்பத்த, பட்டகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத மகேஷ் சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 8.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இதன்போது தனது சகோதருடன் இணைந்து கொத்து ரொட்டி சாட்பிட்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இளைஞன் கல்பத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிப்படை சிகிச்சையின் பின்னர் அவர் ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கொத்து ரொட்டியை சாப்பிட்ட சகோதரருக்கு எந்த உடல்நலக் குறைவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையை ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன நடத்த உள்ளதாகவு, பிரேத பரிசோதனையின் பின்னரே அவரது மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.