குருணாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஒருவர் பலி
குருணாகல் ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் என்றும், ஹெட்டிபொல, மகுலாகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, அருகிலிருந்த சிலர் பன்றிகளை வேட்டையாடும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த சிறுமியின் பாட்டி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நடவடிக்கைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.