AI போலி வீடியோக்களுக்கு எதிராக யூடியூப் அதிரடி நடவடிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான காணொளிகளை (Deepfakes) அடையாளம் கண்டு அகற்றுவதற்காக, யூடியூப் நிறுவனம் புதிய இலவசக் கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் வேட்பாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் AI காணொளிகளால் (Likeness) ஏற்படும் அடையாளத் திருட்டைத் தடுக்க இது உதவும்.
இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர், தங்களது காணொளி மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை யூடியூப் நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.

இதன் மூலம், ஒருவரின் முகச்சாயலை ஒத்த போலி காணொளிகள் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டால், அது குறித்து 'யூடியூப் ஸ்டுடியோ' (YouTube Studio) மூலம் சம்பந்தப்பட்ட நபருக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
AI தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபலங்களின் உருவத்தைப் பயன்படுத்தித் தவறான தகவல்கள் மற்றும் மோசடிகள் (Scams) பரப்பப்படுவதைத் தடுக்க யூடியூப் முயல்கிறது.
பயனர்கள் வழங்கும் தகவல்கள் கூகுளின் AI மாதிரிகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும், அது போலி காணொளிகளை கண்டறிய மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்த வசதி மேலும் பலருக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்களை விமர்சிக்கும் 'நையாண்டி' (Parody) மற்றும் 'கேலி' (Satire) காணொளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அதே வேளையில், தவறான நோக்கத்துடன் உருவாக்கப்படும் காணொளிகளை அகற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.