யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தந்தையை வாளால் வெட்டி கடுமையாக காயப்படுத்தியதுடன், மனைவியின் தாயாரையும் வாளால் தாக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் மாமியார் எனவும், படுகாயமடைந்த மாமனார் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய நபர் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருபவர் எனவும் அறியப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர், பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் ஐந்து பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.