தனியார் பேருந்தின் சாரதி - நடத்துனரை தாக்கிய 5 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
மஸ்கெலியா பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்று நடத்துநரை தாக்கிய குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இ.போ.ச ஹட்டனுக்கு சொந்தமான பேருந்தில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற சிலர் ஹட்டன் தொடருந்து நிலையம் வரை பயணித்துள்ளனர்.
இதன்போது, மஸ்கெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று குறித்த அரச பேருந்தை பல தடவைகள் முந்திச் செல்ல முற்பட்டபோது, மர்ம நபர்களால் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரச பேருந்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்த சிவனொளிபாதை மலைக்கு சென்று திரும்பிய ஒருவர் கல் வீச்சினால் காயமடைந்துள்ளார்.
அவர் காயமடைந்ததை அடுத்து, அந்த பேருந்தில் பயணித்த 5 இளைஞர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கி பின்னால் வந்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர்.
இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலினால் மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் முற்றாக தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 பஸ்களையும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றதுடன், சந்தேகநபர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் காலி பகுதியைச் சேரந்த 22 முதல் 24 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.