திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி
இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த தகவலை மறைத்து குறித்த இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குடும்பத்தினருக்கு தெரியவந்தால் பிரச்சினை ஏற்படும் என இளம்பெண் கூறியதைத் தொடர்ந்து, நாகசாய் அவருக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் இளம்பெண்ணுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கடுமையான வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
மேலதிக சிகிச்சை
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவ ஆலோசனையின்றி இளம்பெண்ணுக்கு மருந்து வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நாகசாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.