எதற்காக இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டும்? சவேந்திர சில்வா
இலங்கையின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் சூழலில், எதற்காக இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரால் சவேந்திர சில்வா (Shavandra Silva) கேள்வி எழுப்பினார்.
இன்று (11-05-2022) இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைகளுக்கு ஆஜரான பின்னர் வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக ஒரு தகவல் உள்ளது.
உண்மையில் இராணுவ தளபதி எனும் ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன பதிலளிக்க விரும்புகின்றீர்கள்? அந்த தகவல் உண்மையானது தானா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெனரால் சவேந்திர சில்வா,
இலங்கையில் அரசியலமைப்பொன்று உள்ளது. அந்த அரசியலமைப்புக்கு அமையவே இராணுவம் செயற்படும். அரசியலமைப்புக்குமைய நாட்டை பாதுகாப்பதே செயற்பாடாகும். தற்போதைய சூழலில் நாம் அதனையே செய்கின்றோம். நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்.
தற்போதைய ஜனாதிபதியே நாட்டினுடைய ஜனாதிபதி. அரசியலமைப்புக்கு அமைய அவருக்கு அப்பதவியில் இருக்க தற்போதும் அவகாசம் இருக்கிறது.
அவ்வாறு இருக்கையில் இரணுவத்துக்கு ஆட்சியை கைப்பற்ற எந்த தேவையும் இல்லை. அத்தோடு ஜனாதிபதியே முப்படைகளினுடைய தளபதியாவார்.
ஜனாதிபதியைப் போன்றே அவர் முப்படைகளின் தளபதி. அப்படி இருக்கையில் நாம் எதற்கு மீள ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.