பௌத்தர்கள் இல்லாத வடக்கில் புதிய விகாரைகள் எதற்கு? தேரர் கேள்வி
வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் தேரர் மேலும் கூறுகையில்,
இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும்
இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும் தவிர மாறி மாறி வேலைகளை செய்யக்கூடாது.
வடக்கில் பழமையான கோயில்கள் இருந்தால் அது பரவாயில்லை. ஆனால் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படும் வழிபாட்டிடங்களேயே நான் கூறுகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை நெடுந்தீவு, மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வந்த போது தான் அதற்கு இடமளிக்கவில்லை எனவும் தேரர் குறிப்பிட்டார்.
மேலும் தான் எப்போதும் மக்கள் பக்கத்தையும் சரியான பக்கத்தையுமே எடுப்பேன் என தெரிவித்த நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் , நான் சிங்களவன் தான் ஆனாலும் எந்த செயலிலும் நேர்மை இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.