மலேசியாவில் கைதான ‘ரத்மலானே சைமா’ ; விசாரணையில் அம்பலமான பெரும் பின்னணி
மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட நடவடிக்கை
இலங்கை பொலிஸ் குழுவொன்று மலேசிய பொலிஸாருடன் இணைந்து அண்மையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, தனுஷ்க கௌஷல்ய என்ற 'ரத்மலானே சைமா' உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் இவரே வழிநடத்தியுள்ளார்
கைது செய்யப்பட்ட சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டுள்ள தோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதையும் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டில் கெஹெல்பத்தர பத்மே மலேசியாவில் தலைமறைவாக வாழ்வதற்கு, கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் இவர் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது பிரான்ஸில் தலைமறைவாக இருக்கும் 'குடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகச் சில காலம் செயற்பட்ட இவர், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
'குடு அஞ்சு' சைமாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அது குறித்து கஞ்சிபானி இம்ரான் சைமாவிற்கு எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் கஞ்சிபானியுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார். இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.