இந்திய அணியில் இத்தனை பிரச்னைகளா ; 2ஆவது போட்டிக்கு என்ன செய்யப்போகிறார் ரோஹித்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பல பிரச்னைகள் உள்ளன.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்கும் போது இந்தியாவுக்கே அதிக சாதகம் இருப்பதாக கணிக்கப்பட்டது.
சொந்த மண் ஒரு சாதகம் என்றாலும் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை டிரா செய்து வந்த நிலையில், அதே ரிதமில் இந்த தொடரையும் எளிதாக இந்தியா கையாளும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் மொத்தமும் தலைகீழானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், இங்கிலாந்து அணி (Team England) கொடுத்த முரட்டு கம்பேக் யாரும் எதிர்பார்க்காதது.
தற்போது 0-1 என்ற கணக்கில் இந்திய அணி (Team India) பின்தங்கியுள்ளது. அடுத்த போட்டி விசாகப்பட்டினம் நகரில் பெப்ரவரி 02ஆம் திகதி தொடங்குகிறது.
இதன்பின், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் மீதம் உள்ள போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு இந்த தொடரில் எழுந்த முதல் பிரச்னை என்றால் அது முகமது ஷமி (Mohammed Shami) காயத்தில் இருந்து மீளாதது எனலாம்.
அவரை போன்ற வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பெரும் பின்னடைவு. இதற்கடுத்து, ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட போது ஏற்பட்ட பிரச்னை என்றால் அது விராட் கோலி (Virat Kohli) முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
ஜடேஜா அணியிலிருந்து விலகும் நிலை
விராட் கோலி இல்லாத மிடில் ஆர்டர், தூணே இல்லாமல் இருக்கும் ஒரு தொங்கு பாலமாகவே காட்சியளிக்கிறது.
முதல் போட்டி தோல்வியில் இருந்து இந்தியா மீள முயற்சிக்கும் வேளையில், முக்கிய வீரர்களான கேஎல் ராகுல் (KL Rahul), ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆகியோர் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.
இதில் கேஎல் ராகுல் மூன்றாவது போட்டிக்கு திரும்புவார் என கூறப்படும் நிலையில், ஜடேஜா இந்த தொடரில் இருந்தே மொத்தமாக விலகும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
பேட்டிங் பிரச்சிணை
விராட் கோலிக்கு பதில் ரஜத் பட்டிதார் (Rajat Patidar) அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவர்களின் விலகலால் சர்ஃபராஸ் கான், சௌரப் குமார் (Sourabh Kumar), வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், இவர்கள் இங்கிலாந்து தொடருக்கு தயாராவது சற்று கடினம்தான். ராகுல், ஜடேஜா காயத்திற்கு முன்னரே இந்திய அணி அடுத்த போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்யும் என்பதை அனைவரும் எதிர்பார்த்தனர்.
குறிப்பாக, ஏறத்தாழ ஹைதராபாத் மைதானத்தை போன்றதே விசாகப்பட்டினம் மைதானமும். பேட்டிங்கிற்கும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கும். இதனால், இந்தியா என்ன காம்பினேஷனில் விளையாடப்போகிறது என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
விராட் கோலி எப்போதும் இறங்கும் நம்பர் 4 ஸ்பாட்தான் தற்போதைய பிரச்னை. கேஎல் ராகுல் கடந்த போட்டியில் அந்த இடத்தில் முதல் இன்னிங்ஸில் 86 ரன்களையும் சேர்த்து ஆறுதல் அளித்தார். தற்போது அவரும் இல்லை.
எனவே, ரஜத் பட்டிதார் அல்லது சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) ஆகியோரில் ஒருவரை எடுக்க முயற்சிப்பார்கள்.
இருவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிருந்தனர். ஷ்ரேயாஸ், சுப்மான் கில் இருவரும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.
இருப்பினும், இந்திய அணி அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்கலாம். இதன்பின்னரே அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்கு தேவையா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஜடேஜாவுக்கு பேட்டிங்கில் மாற்றை கண்டுபிடிப்பது மிக மிக கடினம்.
பந்துவீச்சு பிரச்சினை
பந்துவீச்சில் கடந்த போட்டியிலேயே சிராஜ்11 ஓவர்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக வீசியிருந்தார். அவர் விக்கெட்டும் பெரிதாக எடுக்காத நிலையில், அடுத்த போட்டியில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருக்காக குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்படலாம்.
சிராஜ் வெளியே இருப்பது கூடுதல் ஆப்ஷனை வழங்கும். இந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் (Ravichandran Ashwin) இருந்தாலும், இவரின் பேட்டிங்கையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.
வாஷிங்டன் சுந்திருக்கு (Washington Sundar) பதில் முழு நேர பேட்டரை எடுத்தால் நான்கு பந்துவீச்சாளர்களுடன் (1 வேகப்பந்துவீச்சாளர்) இந்தியா விளையாட வேண்டி வரும்.
எனவே, பலவீனமாக காணப்படும் பேட்டிங்கை முழுநேர பேட்டர்களை கொண்டு வலுப்படுத்துமா அல்லது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் ஆகியோரின் கையிலேயே உள்ளது.