மகா திறைசேரி நிதி மோசடி ; 5 அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயணத் தடை
மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம் சிக்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (28) முதன்முறையாக நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது.
மின்னஞ்சல் கட்டமைப்பைப் பராமரிக்கும் நிறுவனம் இது குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், எவ்வித மேலதிக தேடுதல்களும் இன்றி இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக CID நீதிமன்றில் தெரிவித்தது.
இதற்கமைய, அரச கடன் மேலாண்மை அலுவலகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்தது.
விசாரணை குறித்து கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் விடயங்களை முன்வைத்த CID அதிகாரி, இது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் நுணுக்கமான விசாரணை என்பதால், சமர்ப்பிக்கப்பட்ட 27 பக்க அறிக்கையை நீதிமன்றப் பதிவாளரின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்குமாறு கோரினார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் "exportfinance.gov.au" என்ற சரியான இணைய முகவரிக்கு பதிலாக, "exportfinance.av.com" என்ற போலி முகவரி மூலம் வந்த விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்னஞ்சல் கட்டமைப்பைப் பராமரிக்கும் நிறுவனம் 2025.10.28 அன்றே இது குறித்து எச்சரித்திருந்த போதிலும், அந்த எச்சரிக்கைக்குப் பின்னரே நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் இன்டர்போல் மற்றும் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரின் (Australian Federal Police) உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போதுவரை சந்தேக நபர்கள் எவரும் பெயரிடப்படவில்லை என்றாலும், மின்னஞ்சல் கொடுக்கல் வாங்கல்களில் நேரடியாகத் தொடர்புடைய 5 அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளைச் சோதனையிடவும் அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை ஒன்றியம், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினி கற்கைகள் பீடப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழிநுட்பக் குழுவொன்றை நியமிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு ஜூன் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.