நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரதீபராஜா வெளியிட்ட தகவல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட நாட்டின் பல பகுதிகளுக்கும் நாளை(20) முதல் 26ஆம் திகதி வரை, பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வானிலை மாற்றம்
கடந்த பல நாள்களாக மிக அதிகமான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, வட மத்திய, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இந்த மழை பெரிய ஆறுதலாக அமையும்.
ஆனால் மழை கிடைக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் அதிக வெப்பநிலையுடனான வானிலை தொடரும்.
இதேநேரம் இன்று வரையான தரவுகளின் அடிப்படையில் உண்மையான மற்றும் உணரக்கூடிய வெப்பநிலை அடிப்படையில் இந்த ஏப்ரல் மாதமே அதிக அளவிலான வெப்பநிலை நிலவும் ஏப்ரல் மாதமாக பதிவாகியுள்ளது.
கடந்த 19 நாட்களில் வடக்கின் அளவிடப்பட்ட வெப்பநிலை சராசரியாக 36.3 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 36.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.