ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு உள்ளோம் ; சர்ச்சையை கிளப்பும் அமெரிக்காவின் கருத்து
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்திகதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்திகதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதனால், பதற்றம் சற்று தணிந்தது. இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

அமைதி பேச்சுவார்த்தை
எனினும், இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் ஏறக்குறைய 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது.
இதனால், ஈரானை அமெரிக்கா தாக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன.
இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியை உலக நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க விமான படையின் ஜெனரல் டேன் கெய்ன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிடவில்லை.
ஈரானின் துறைமுகங்கள் அல்லது கடலோர பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டு உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை அல்ல.
ஈரானின் பிராந்தியத்திற்கு உட்பட்ட கடல்கள் மற்றும் சர்வதேச நீர்வழிகளில் இந்த நடைமுறை நீடிக்கும் என்றார்.
இதனால், ஈரானின் துறைமுகங்களில் இருந்து வெளிவரும் அல்லது துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து கப்பல்களுக்கும், நாடுகள் வித்தியாசமின்றி இந்த முற்றுகையானது நீடிக்கும் என்றும் கூறினார்.