விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் திரும்பபெறப்பட்டது ; பதவி ஏற்பதில் தொடரும் சிக்கல்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்குரிய விசேட பாதுகாப்பு மற்றும் வாகன அணிவகுப்பு இன்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நேற்று தனது நீலாங்கரை இல்லத்துக்குத் திரும்பியுள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கான்வாய் வாகனங்கள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நியைில் த.வெ.க. உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கேட்டையன் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார்.
கடந்த இரண்டு நாட்களாக த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்களுடனான பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
வாக்கு எண்ணிக்கை நடந்த தினமே அவருக்கு கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவை தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு சென்றன. 4 கான்வாய் வாகனங்களும் புறப்பட்ட நிலையில் பொலிஸார் மட்டுமே விஜய்யுடன் உள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு எனப்படும் கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதில், தானாக முன்வந்து கான்வாய் வாகனங்களை விஜய் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சியமைக்காத சூழலில், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் பதற்றம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.