நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஆகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேல்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது வரம்பில் மாற்றங்களை முன்மொழியும் நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலமும் அன்றைய தினமே சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தத்தின் கீழ், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 65 வயது வரை பணியாற்ற முடியும். அதேநேரம் பிரதம நீதியரசர் 67 வயதை அடைந்ததும் அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததும் ஓய்வு பெறுவார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்கும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.
இதற்கிடையில், முன்மொழியப்பட்டுள்ள நீதித்துறை அமைப்புகள் சட்டத் திருத்தங்களின் மூலம் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் உயர்த்தப்படும்.
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அனுபவமிக்க சிரேஷ்ட நீதிபதிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கும் இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.
அரச ஊடக அறிக்கையின்படி, இந்த இரண்டு சட்டமூலங்களினதும் முதல் வாசிப்பு ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அவை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் அரசியலமைப்புத் தன்மையை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு குடிமக்களுக்கும் அமைப்புகளுக்கும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் என்பதுடன், நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.