சற்று முன் விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் ; குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி, கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி சப்புகஸ்கந்த பகுதியில் இன்று (11) இரவு விபத்து இடம்பெற்றுள்ளது.
இரவு 7.45 மணியளவில் சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காரில் ஒரு பெண்ணும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
அதற்கமைய பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும், சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த, ஜீப் வண்டியில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.