தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை
தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, உத்பலவர்ண தேவாலய பஸ்நாயக்க நிலமேவுக்கு இன்று (26) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவடி நடனம்
தேவேந்திர முனை தேவாலயத்தின் பெரஹர ஊர்வலம் இநாட்களில் நடைபெற்று வரும் நிலையில், காவடி நடன அங்கம் அடங்கிய பெரஹர எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது.
குறித்த பெரஹர தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு தலைவர், தேசிய புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையே முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, குறித்த தினத்தில் நடைபெறவிருந்த காவடி நடன அங்கத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.
அந்த எழுத்துப்பூர்வ அறிவித்தலுக்கு அமைய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன இன்று அது தொடர்பில் குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.