பருத்தித் துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தை
யாழ். பருத்தித்துறையில் உள்ள துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
அண்மையில் தொழில்நுட்ப குழுவொன்றும் பருத்தித்துறைக்கு வந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை என ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் என்பது வர்த்தக ரீதியில் இயங்குவதையும் சுட்டிக்காட்டினார். பலாலி விமான நிலையம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனினும் அதனை நவீனமயமாக்கி வினைத்திறனான சேவையை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
பல மில்லியன் பணத்தை செலவழித்து மற்றுமொரு மத்தள விமான நிலையமாக பலாலியை மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை படிப்படியாக செயற்படுத்தவுள்ளதாகவும் சந்திரசேகர் கூறினார்.