எம்.பி அர்ச்சுனாவின் கருத்து சர்ச்சை ; யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கடும் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது போட்டி அரசியலை பல்கலைக்கழகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்திற்கும், கொத்து ரொட்டிக்கும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என இராமநாதன் அருச்சுனா தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“இராமநாதன் அருச்சுனா இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது சிந்தித்து பேச வேண்டும்.
தனது தேவைகளுக்காக மாணவர்களை இழிவுபடுத்தக்கூடாது,” என இளம்பிறையன் தெரிவித்தார். மேலும், “பல்கலைக்கழக மாணவர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்று வருகின்றனர்.
அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் முன்னின்று செயற்படுகின்றனர். அவர்களின் சக்தியை பயன்படுத்த வேண்டும் தவிர, அவமதிக்கக்கூடாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “பல்கலைக்கழக மாணவர் சக்தி மிகவும் வலிமையானது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அரசியல் போட்டிகளை வெளியே வைத்துக் கொள்ள வேண்டும் பல்கலைக்கழகத்தை அதற்காக பயன்படுத்தக்கூடாது,” எனவும் அவர் எச்சரித்தார்.