உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம்; அமைச்சர் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் மீது பாய்ந்த பிரதேச செயலாளர்
யாழ்ப்பாணம் - கரவெட்டி பிரதேச செயலாளர் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தான் மதுபானசாலைக்குரிய அனுமதியினை வழங்கச் சொன்னதற்கு அமைவாக தான் வழங்கியதாக குறிப்பிட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் பிரஸ்தாபிப்பதற்காக நேற்றையதினம் (19) உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திருந்தார்கள்.
இந்த சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன், உடுப்பிட்டி சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும், யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன், கரவெட்டி பிரதேச செயலாளர் தயாரூபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரதேச செயலாளர்
இதன்போது இரண்டொரு நாட்களில் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து அதனை ஆராய்ந்து உரிய தரப்புகளுடன் பேசி மதுபானசாலையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்குரிய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அத்தோடு மக்கள் எதிர்ப்புக்கள் இருந்தால் அந்த இடத்தில் மதுபானசாலை அனுமதியை வழங்க முடியாதென யாழ். மாவட்ட செயலாளர் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உறுதிபட குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை கூட்டத்தில் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலாளர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததுடன் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதேச செயலாளருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் மதுபானசாலைக்குரிய இட அனுமதிக்கான கூட்டத்தை அரைமணி நேர அவகாசத்தில் பிரதேச செயலாளர் வைத்ததால், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க முடியாமல் இருந்ததாகவும் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஒரு கட்டத்தில் மதுபானசாலைக்குரிய இட அனுமதியை கொடுப்பதற்கு உங்களை ஏன் கேட்க வேண்டும் என சமூக மட்ட அமைப்புகளிடம் சீறிப்பாய்ந்தார் கரவெட்டி பிரதேச செயலாளர்.
பஸ்ஸில் எங்கையோ இருந்து மக்களை கொண்டு வந்து போராட்டம் நடாத்தியதாக கரவெட்டி பிரதேச செயலாளர் , கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரின் கருத்துக்கு தங்களின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
மேலும் போராட்டத்தில் பங்கேற்ற ஊரவர்களை தங்களது கிராம சேவையாளரின் துணையுடன் இனங்காணுமாறும், அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாமெனவும் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினர்.
மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் பிரதேச செயலாளர்
தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் ஒடுங்கிய உடுப்பிட்டி - வதிரி வீதியில் மதுபானசாலை அமைந்துள்ளதால் குறித்த இடத்தில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
அதுமட்டுமல்லாது பாடசாலைகள், தனியார்கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிரதேசசெயலாளர் ஏன் செயற்படுகின்றார் என உடுப்பிட்டி வாழ் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் நலன்சார்ந்து உடனடியாக செய்ய வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் மக்களின் எதிர்கால பொருளாதார வாழ்வியல் பண்பாட்டு அழிவியலுக்கு துணை போகும் மதுபானச் சாலையை மக்கள் செறிவாக பயன்படுத்தும் வீதியில் அமைப்பதற்காக கடுமையான அக்கறை காட்டுகிறது அரச நிர்வாகம்.
இந்நிலையில் பொதுமக்களின் வரிப்பணத்தில் வயிறு வளர்ப்பவர்கள் மக்களின் கருத்துகளையும் கிஞ்சித்தாவது கேட்கலாமே என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.