ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடைக்கலம் கொடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட நாடு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதையடுத்து, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி (Ashraf Ghani
) நாட்டைவிட்டு வெளியேறினர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி தமது நாட்டில் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகொப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.
அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன. மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின.
ஆனால் தஜிகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்தன.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.