கோப்பாய் பொலிஸாரை கத்தியை காண்பித்து அச்சுறுத்திய இருவருக்கு நேர்ந்த கதி!
யாழ்பாணம் - கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்ற இரண்டு இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடந்த வாரம் உரும்பிராய் சந்தியில் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மறித்து சோதனையிட முற்பட்டனர்.
இதன்போது கோப்பாய் பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள் தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்தனர். அவர்கள் இரண்டு பேரும் நேற்றைய தினம் (03-05-2023) சட்டத்தரணி ஊடாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் இருவரையும் இன்றைய தினம் (04-05-2023) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.
இதேவேளை, சந்தேக நபர்கள் இருவர் சார்பிலும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்ட போதும் அதனை நிராகரித்த மன்று இருவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.