இலங்கையில் தேடப்பட்டு வந்த இருவர் தமிழகத்தில் சிக்கினர்!
இலங்கையில் தேடப்பட்டு இரு குற்றவாளிகள் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குறித்த இருவரும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளில் பல நாட்களாக தேடப்பட்டு வந்தனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22-ம் திகதி முதல் தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தமிழகம் வந்தடைந்த இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 21-ம் திகதி, இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், கடலோரக் காவல் படையினர், இலங்கைத் தமிழர்களை மீட்டு, மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்துக்கு தப்பிச் சென்றவர்களிடம் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபர் பிரபல நகைக்கடையை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் அவர் பிணையில் வெளியில் இருப்பதும் தெரியவந்தது.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் - மண்டபம் அகதிகள் முகாமில் தேடப்படும் குற்றவாளிகள் இருவரும் அகதிகளாக வாழ்வதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.