கொழும்பில் ரூ. 2 கோடிக்கும் அதிக பணத்துடன் இருவர் கைது
கொழும்பில் சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத ரூ.2 கோடியே 70 இலட்சம் பணத்துடன் பயணித்த இரு சந்தேகநபர்களை கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (21) மாலை, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த ரூ.2.70 கோடி பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

குறித்த பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையோ அல்லது திருப்திகரமான விளக்கத்தையோ சந்தேகநபர்கள் வழங்கத் தவறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 59 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் முறையே கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதா என்பதை கண்டறியும் நோக்கில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.