தமிழர் பகுதியில் சிசு மரணம் விவகாரம் ; வைத்தியர் சங்கம் அதிரடி மறுப்பு
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற சிசு மரணமானது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டத்தினால் ஏற்பட்டதல்ல என்றும், இது குறித்து தவறான கருத்துக்களை பகிரப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கம் மேற்படி விடயம் தொடர்பில் நேற்று விசேட ஊடக அறிக்கை ஒன்றை விடுத்திருந்து இதனைத் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி திருகோணமலை வைத்தியசாலையின் பிரசவ அறையில் இடம்பெற்ற சிசு மரணம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் காலப்பகுதியிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பிரசவ அறைகளின் செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தமது கிளைச் சங்கங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சை நிலையங்களின் சேவைகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படாமல் இருப்பதை சங்கம் உறுதி செய்துள்ளது.
இவ்வாறான நிலையில், குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி, வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டமே இந்தச் சோகமான சம்பவத்துகுக் காரணம் என குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாக அச்சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சிசு மரணம் தொடர்பில் முறையான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் கொண்ட நிபுணர் குழுவைக் கொண்டு சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.