வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்
நாட்டில் நிலவும் தீவிர மழையுடனான சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பில் அகலவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பகுதியில் வசித்து வந்த ஹசித பிரதீப் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அகலவத்தை மிஹிந்து மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன், சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு படுகையில் (Plug Point) மின்னல் தாக்கியதாகவும், அதன் தாக்கம் மாணவனையும் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.