போக்குவரத்துப் பொலிஸார் விசேட சோதனை
ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்துப் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹட்டன், ஸ்ரீ பாத, மஸ்கெலியா, பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடை போன்ற பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் அவசர சோதனைக்கு உட்படுத்தினர்.
சாரதிகளுக்கு அறிவுரைகள்
சோதனையின்போது பொது போக்குவரத்து வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பல நிறங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்கள்,
அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளின் (ஹோர்ன்கள் Horn) பயன்பாடு உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில் அபாயகரமான மேலதிக உதிரிப்பாகங்களைக் அகற்றி ஒழுங்குபடுத்துவதற்கும் குறைபாடுகளை சரிசெய்வதற்கும் சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையில் போக்குவரத்து ஒழுங்கும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சில சாரதிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் இதனை மீறும் சாரதிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.