ஊடறுத்துப் பாயும் வெள்ளம் ; கிண்ணியா போக்குவரத்திற்கு தடை
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியின் முள்ளியடி பகுதி உட்பட பிரதான வீதியிலும் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதால் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று (27) கடும்மழை காரணமாக குறித்த பகுதியின் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் தம்பலகாமம் கோயிலடி பகுதி நெற் செய்கை விவசாய நிலங்களும் மூழ்கியுள்ளன.

விவசாய நிலங்களும் மூழ்கியது
200க்கும் மேற்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன். பாலம்போட்டாறு பத்தினிபுரம் முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகளும் நீரால் மூழ்கியதுடன் வீடுகளுக்குல்லும் நீர் புகுந்ததால் பல்வேறு அசௌகரியங்களை பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
தாயிப் நகர் தம்பலகாமம் கோயிலடி வைத்தியசாலை வரையான வீதியின் ஒரு பகுதி தரை வழிப் போக்குவரத்தும் வெள்ள நீரால் குறித்த வீதி ஊடறுத்துப் பாய்வதால் தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இது போன்று குளக்டோட்டன் பாடசாலையின் முன்னால் உள்ள பாலம்போட்டாறு வரையான வீதியின் ஒரு பகுதியின் தரை வழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதிப்புக்குள்ளான பகுதிகளை தம்பலகாமம் பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டு நீரை வழிந்தோடச் செய்யவும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தினார்.
