ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் 6 வருடங்கள் நிறைவு
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகிறது.
பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் முழு விபரங்கள்
இலங்கையில் இந்நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஈழப் போர் முடிவின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற முதலாவது பெரிய தாக்குதல் நிகழ்வுகள் இவையாகும்
இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன.
39 வெளிநாட்டவர்கள்,3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன.
ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன
இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்
2019 ஏப்ரல் 23 அன்று, இசுலாமிய அரசு (ஐஎஸ்) என்ற இசுலாமியத் தீவிரவாத ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது.
தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் அபூ பக்கர் அல்-பக்தாதி என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்
இக்குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் ஆவர், 39 பேர் வெளிநாட்டவர்கள் இறந்தவர்களில் இலங்கைத் தொலைக்காட்சி சமையல் நிபுணர் சாந்தா மாயாதுன்னையும் அவரது மகளும் அடங்குவர்.
இவர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சற்று முன்னர் உணவகத்தில் உணவருந்திய படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
டென்மார்க் தொழிலதிபர் ஆன்டர்சு பவுல்சென் என்பவரின் மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள்.
வங்காளதேச அரசியல்வாதி சேக் பசுலுல் செலிம் என்பவரின் பேரன் இறந்தவர்களில் ஒருவர் ஆவார்.
இந்திய சமயச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
இறந்த வெளிநாட்டவர்களில் குறைந்தது 8 பேர் சிறுவர்கள் ஆவர்.